புலிவேசம் - ஆர்.‌கே.யின் புதிய அவதாரம்

பிஸினஸ்மேன், ஹீரோ, வில்லன் என் பன்முகங்கொண்ட ஆர்.‌கே.யின் புதிய அவதாரம் தான் ‌"புலிவேசம்"!

வயித்துக்கு சோறு போட்டு, கைநிறைய காசு கொடுத்து, யாரை கூறு ‌போட சொன்னாலும் மறு பேச்சே இல்லாமல் வேலையை முடிக்கும் கேரக்டர் முனியனுடையது. முனியனாக ஹீரோ ஆர்.கே., அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்...? என்பதை ஒருபக்கம் தீவிரமாக ஆராயும் நேர்மையான போலீஸ் ஆபிஸர் கார்த்திக், மற்றொரு பக்கம் தன் போலீஸ் நண்பனை போட்டு தள்ளியவர்களை தீர்த்துகட்டி திருப்திபட்டுக்கொள்ளும், முனியன் எனும் ஆர்.கே.யை பயன்படுத்தி கொண்டு அதிரடி பண்ணுகிறார்.

முனியன் ஒரு கவளம் சோற்றுக்காகவும், காசுக்காவும் எதையும் செய்ய காரணம் என்ன? அவ்வாறு கிடைக்கும் காசு பணத்தை என்ன செய்கிறார் ஆர்.கே...? எனும் வினாக்களுக்கான விடைகளும், இன்னும் பல வித்தியாசமான விகாரங்களையும், விவகாரங்களையும் கலந்துகட்டி விறுவிறுப்பாக சொல்கிறது "புலிவேசம்" படத்தின் மீதிக்கதை!

முனியனாக ஹீரோவாக ஆர்.கே., பிற்பாதியில் வரும் கிராமத்தான் பாத்திரத்தில் பக்காவாக நூற்றுக்கு நூறு பொருந்துகிறார். முற்பாதி சிட்டி சப்ஜெக்டில் ஐம்பது சதவிகிதமே அசத்துகிறார். அவரைவிட அவரது குரல், எதையும் காசுக்காக செய்யத்துணியும் கேரக்டருக்கு எதிராய் செயல்படுவது பலவீனம்!

சின்சியர் போலீஸ் ஆபிஸராக கார்த்திக், ரொம்ப நாளைக்கப்புறம் கதாநாயகன் லுக்கில் கலக்கி இருக்கிறார். "புலிவேசம்" படத்தின் பெரியபலம் கார்த்திக்தான். கிரிக்‌கெட் பேட்டும் கையுமாக, இளம் பெண்களை கடத்துவதை குலத்தொழிலாக கொண்ட மன்சூரலிகான் செம கலக்கல். யார், யாரோ பேசுறாங்க, 20 வருஷமா நிலைத்து நிற்கும் நான் பன்ச் டயலாக் பேசக்கூடாத என பிய்த்து பெடலெடுக்கும் அவர் பேச்சில் செம நக்கல்! கார்த்திக் மாதிரியே, கலகலக்கலாக படம்முழுக்க புலிவேசத்தை காப்பாற்றியிருக்கிறார் மன்சூர், என்றால் மிகையல்ல.

இளவரசு, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஓ.கே.சுந்தர் என இயக்குநர் பி.வாசு, பெரிய ஸ்டார் காஸ்ட் கொடுத்திருக்கிறார்.

சதா, திவ்ய பத்மினி என இரண்டு நாயகியர். கார்த்திக் சொல்லி ஆர்.கே.,வை துப்பறியும் சதாவைக் காட்டிலும், ஆர்.கே.வை அண்ணனாக ஏற்றுக்கொண்டு பாசமழை பொழியும் திவ்ய பத்மினி நடிப்பில் மிளிர்கிறார்.

ஸ்ரீகாந்த்தேவாவின் இதமான, யதார்த்தமான இசை, கருணாமூர்த்தியின் ஓவியம் போன்ற ஒளிரும் ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் இயக்குநர் பி.வாசு, "சின்னத்தம்பி"யில் தொடங்கி "சந்திரமுகி" வரை, இன்னமும் தன் படங்களை மறக்காமல், ஆங்காங்கே புலிவேசம் க(கா)ட்டியிருப்பது, பாய்ச்சலிலும் பாதகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மற்றபடி "புலிவேசம்", ஆர்.கே.யின் "ஆவேசம்!"

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...