கெளதம் மேனனா? - லிங்குசாமியா? - குழப்பத்தில் சூர்யா


மாற்றான் தோல்வி சூர்யாவை சற்று வருத்தமடைய செய்துள்ளது. அதனால் அடுத்து ஒரு சரியான ஹாட்ரிக் கொடுத்தால்தான் பழைய இடத்துக்கு வர முடியும் என்கிற கட்டாயத்தில் நிற்கிறார் சூர்யா. 

அந்த இடத்தை ஹரியின் சிங்கம்-2 பிடித்துத்தரும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், சினிமாவில் எதுவும் நடக்கலாமே? என்பதால், அடுத்தபடியாக முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் வேகம் காட்டி வருகிறார். 

ஆனால் அப்படி அவர் கதை கேட்க களமிறங்கியபோது, அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்களைப்போன்று, கெளதம்மேனன், லிங்குசாமி இருவருமே சூர்யா முன் நின்றார்களாம். இருவருமே சிங்கம்-2 முடிந்ததும் ஆக்சன் சொல்ல நாங்க ரெடி என்கிறார்களாம்.

இதன்காரணமாக, இரண்டுபேரில் யாருக்கு முதலில் கால்சீட் கொடுப்பது என்று குழம்பிப்போய் இருக்கிறார் சூர்யா. இதில் கெளதம்மேனன், ஏற்கனவே சூர்யா நடித்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை இயக்கி, சூர்யாவின் மீது மற்ற இயக்குனர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்தவர். 

அதோடு, யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்க்காக உருவாக்கியவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அதே கதையில் சில திருத்தங்களை செய்து இப்போது துப்பறியும் ஆனந்தன் என்று சூர்யாவுக்காக மாற்றி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். 

அதேபோல் லிங்குசாமியும் ஏற்கனவே சூர்யாவிடம் கதை சொல்லி விட்டு, சமந்தாவையும் புக் பண்ணி வைத்து விட்டு காத்திருப்பவர்தான்.

இதனால், இரண்டு விரலில் ஒரு விரலை தொடு என்று சொன்னால், எந்த விரலை முதலில் தொடுவது என்பது புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார் சூர்யா. இந்த நிலையில், இவர்களில் கெளதம்மேனன், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என்ற இரண்டு தோல்வி படங்களை கொடுத்தவர். 

அதனால் லிங்குசாமி படத்தில் முதலில நடிக்கலாம் என்று சூர்யாவைச் சுற்றியிருக்கும் கதை இலாகா கண் சிமிட்டுகிறதாம். ஆனால் சூர்யாவோ, காக்க காக்க படத்தில் முதன்முதலராக எனக்கு காக்கி சட்டை போட்டு அழகுப்பார்த்தவர் கெளதம், அவரை எப்படி கழட்டி விடுவது என்று யோசிக்கிறாராம். அதனால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

ரூ.200 கோடி வசூல் செய்த கமலின் விஸ்வரூபம்


முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். 

பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். 

இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. 

தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. 

அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. 

பவர் ஸ்டாரை பாராட்டிய சமந்தா

சமந்தா, இப்போதெல்லாம், வாயைத் திறந்தாலே, பவர் ஸ்டாரைப் பற்றித் தான், மாய்ந்து மாய்ந்து பேசுகிறார். "பவர் ஸ்டார் மாதிரி, ஒரு நடிகரை, சிறந்த மனிதரை, நான் பார்த்தது இல்லை. 

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல், படங்களை கொடுப்பதில், அவரை யாரும் அடிச்சுக்க முடியாது என, வார்த்தைக்கு வார்த்தை, பவர் ஸ்டாரை, பாராட்டி தள்ளுகிறார்."பவர் ஸ்டார் சீனிவாசனும், சமந்தாவும், ஒரு படத்தில் கூட, இணைந்து நடித்தது இல்லையே. 

சீனிவாசன் நடித்து, ஓரிரண்டு படங்கள் தானே, வெளியாகியுள்ளன. இப்படி இருக்கும்போது, பவர் ஸ்டாருக்கு, சமந்தா, ஏன் பாராட்டு மழை பொழிகிறார் என, சந்தேகம் வருகிறதா?சமந்தா பாராட்டியது, "பவர் ஸ்டார் சீனிவாசனை அல்ல; தெலுங்கு நடிகர், பவன் கல்யாணைத் தான், பாராட்டி பேசியுள்ளார். 

தெலுங்கு திரையுலக ரசிகர்கள்,பவன் கல்யாணை, "பவர் ஸ்டார் என்று தான்,செல்லமாக அழைக்கின்றனர். அதை  குறிப்பிட்டுத் தான், சமந்தா, இப்படி பேசியுள்ளார்.

ஆதி பகவன் - சினிமா விமர்சனம்


வழக்கமான ஆள்மாறட்ட கதை தான். அதை வித்தியாசமாக சொல்கிறேன் பேர்வழி... என்று வழக்கமான தனது வெற்றி பார்முலாவில் இருந்து விலகிபோய், விக்கித்துப்போய் நிற்கிறார் அமீர்...!!

தாய்லாந்து கேடி ஆதி, மும்பை தில்லாலங்கடி பகவான். ஆதி - பகவான் இருவருமே ஜெயம் ரவி தான் எனும் சூழலில், மும்பை போலீஸ் மொத்தத்திற்கு படியளக்கும் பகவானை தீர்த்துகட்டியே தீர வேண்டும் என்று போலீஸை நிர்பந்திக்கிறது மேலிடம்! 

ஆனாலும் கதாநாயகி நீத்து சந்திராவுக்கு தன் பகவானை காப்பாற்றியே தீர வேண்டும் என்பது திடமான எண்ணம். அதன்விளைவு, பகவானின் சாயலிலேயே தாய்லாந்தில் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் ஆதியை காதலிப்பதாக சொல்லி மும்பைக்கு கடத்தி வரும் நீத்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி மும்பை போலீஸ் கஸ்டடிக்கு ஆதியை, பகவானாக அனுப்பிவிட்டு தன் பகவானுடன் செட்டில் ஆக கோவா வருகிறார். 

ஆதி, மும்பை போலீஸ்க்கு "பெப்பே காட்டிவிட்டு பகவானையும், பகவதியை (அதாங்க நீத்து...)யும் தேடிப்பிடித்து தீர்த்து கட்டுவதுதான் "ஆதி-பகவான்" மொத்த கதையும்!

ஜெயம்ரவி ஆதியாகவும், பகவதியை உள்ளடக்கி பகவானாகவும் இரட்டை வேடங்களில் படம் முழுக்க ‌வருகிறார். ஏதேதோ செய்கிறார். ஆனால் நம் மனம் முழுக்க நிறையாமல் போகிறார். 

ஆரம்ப காட்சிகளில் ஆதியையாவது பார்க்க, ரசிக்க முடிகிறது. ஆனால் ஆண்பாதி, பெண்பாதியாக வரும் மும்பை பகவானை பார்த்தாலே குமட்டுகிறது. அதுவும் பெண் உருவில் இருக்கும் ஆணாக இருந்து கொண்டு, அவர் பார்க்கும் பெண்களை எல்லாம் மடிப்பதும், படுப்பதும் நம்பமுடியாத காமெடி! 

இதெல்லாம் நாங்க "அப்பு பிரகாஷ்ராஜிடமே பார்த்துட்டோம். ஜெயம் ரவியும், இயக்குனர் அமீரும் இன்னும் நிறைய யோசித்து இந்தபடத்தையும், அந்த பாத்திரத்தையும் செய்திருக்கலாம்!

கரீஷ்மா, ராணி என்று இரண்டு கெட்-அப்புகளில் ஒரே நீத்து சந்திரா. அப்படி ஆதியிடம் இல்லாதை பகவானிடம் எதை பார்த்தாரோ? என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை! க்ளைமாக்ஸில் ஆதி ரவியுடன் அவர் பறந்து பறந்து போடும் சண்டைக்காட்சி பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஞாபகப்படுத்தினாலும் சபாஷ் ரகம்!

அனிருத், பாபு ஆண்டனி, மோகன்ராஜ், டார்ஜான், சுதாசந்திரன், கருணா, பகலா பிரசாத் பாபு, பாலாசிங், சரத் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள், யுவன்ஷங்கர்ராஜாவின் இனிய இசை, தேவராஜின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் "ராம், "பருத்திவீரன் படங்களை இயக்கிய அமீரா "ஆதி-பகவன் படத்தின் இயக்குனர் எனக்கேட்கத் தூண்டுகிறது!

அதேமாதிரி இழுத்துக்கொண்டே போகும் க்ளைமாக்ஸ் பைட்டில், ஆதி-பகவான் இருவரில் ஒருத்தரை உடனடியாக கொல்லுங்கள், எங்களை கொல்லாதீர்கள் அமீர் என்று தியேட்டரில் ரசிகர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்க முடிவது "ஆதி-பகவனின் பலவீனங்களில் ஒன்று! இதில் இரண்டாம் பாகத்திற்கு வேறு அமீர் சிலைடு போடுவது படத்தை மேலும் பலவீனமாக்கிவிடுகிறது. 

ஆகமொத்தத்தில், "ஆதி-பகவன்" - "பாதி-தேறுவான் மீதி...?!"

மீண்டும் விஜய்யுடன் டூயட் பாடுகிறார் அசின்


ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கேரளத்து கிளி அசின். அதன்பிறகு விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையானார். 

அப்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி படத்தின் தமிழ்ப்பதிப்பில் நடித்த அசின், அப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். 

அப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றதால், அதன்பிறகு கோலிவுட்டை மறந்து விட்டு பாலிவுட்டில் முழுகவனம் செலுத்தினார். இப்போது குறிப்பிடத்தக்க இந்தி நடிகைகளில் அசினும் ஒருவராகி விட்டார்.

இந்தநிலையில், தமிழில் இருந்து சென்ற வாய்ப்புகளை தவிர்த்து வந்த அசின், இப்போது காவலன் படத்தையடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் படமொன்றில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். 

அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். ஆனால் முன்பு ரஜினிக்காக அந்நிறுவனத்திடம் கதை சொல்லியிருந்த கே.வி.ஆனந்தை விஜய் நடிக்கும் படத்தை இயக்க வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 

தலைவா படத்தை முடித்ததும் இப்படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.

பாரதிராஜா, இளையராஜா மோதல் வெடித்தது


பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். 

அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். 

மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். 

அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள். 

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். 

புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. 

அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். 

சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. 

நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. 

இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். 

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.

விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி


விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. 

இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். 

அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். 

லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி,  இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கோடை ஸ்பெஷலாக ரஜினியின் கோச்சடையான்


ரஜினி மறுவாழ்வு பெற்ற பின்பு நடித்துள்ள கோச்சடையான் படம் கோடை ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி கமிட்டான படம் ராணா. ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்க இருந்தார். 

படத்தின் படபூஜை எல்லாம் போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பமாக இருந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சென்று சிகிச்சை பெற்று கிட்டத்தட்ட மறுவாழ்வு பெற்று திரும்பினார் ரஜினி. 

உடல்நலம் சரியில்லாமல் போனதால் ராணா படம் கைவிடப்பட்ட நிலையில், தனது மகள் சவுந்தர்யா இயக்கும் 3டி படமான கோச்சடையானில் நடிக்க கமிட்டானார் ரஜினி. 

இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனேயே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நடிகை ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் படத்த‌ின் ரிலீஸை கோடை ஸ்பெஷலாக ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு முன்பாக படத்தின் ஆடியோ அடுத்தமாதம் மார்ச்சில் வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினி மறுவாழ்வு பெற்று, திரும்பவும் நடித்து கோச்சடையான் படம் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் இந்தபடத்தை ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

வன யுத்தம் - விமர்சனம்


தமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்‌கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் "வனயுத்தம்" மொத்தமும்!

கதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் "வனயுத்தம்! இது வீரப்பனின் கதையா.? தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா...? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!

வீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்டைகளையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.

விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, "குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார். 

வீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் "ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், "கெஸ்ட் ரோலா? "ஒஸ்ட் ரோலா? என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்!

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்! 

வீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா.? விஜயகுமாரின் வெற்றிக்கதையா...? என்பதை புரியாதா புதிராக்கிவிடுகிறது.

எனவே "வனயுத்தம்", வழக்கமான "தமிழ்சினிமா சப்தம்! யுத்தம்!!" எனலாம்...

சிங்கம்2 வில் சூர்யாவுடன் மோதும் ஹாலிவுட் நடிகர்


ஏழாம் அறிவு படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி டிரை நெகுனுடன் மோதிய நடிகர் சூர்யா இப்போது, சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் மற்றொரு ஹாலிவுட் நடிகர் டேனி சபானியுடன் மோத உள்ளார். 

டைரக்டர் ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சிங்கம்-2-வை இயக்கி வருகிறார் ஹரி. 

இதிலும் சூர்யா-அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். கூடவே படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகர் அஞ்சலி. 

பொதுவாக ஹரி தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கை அதிகளவு வெளிநாடுகளில் எடுக்கமாட்டார். 

ஆனால் சிங்கம்-2 படத்தின் ஷூட்டிங்கை தென் ஆப்ரிக்கா, தான்சானியா போன்ற நாடுகளில் படமாக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் டேனி சபானி நடிக்க உள்ளார். 

இவர் தி ஆக்ஸ்போர்ட் மர்டர், மெர்சினிரீஸ் ‌போன்ற படங்களில் நடித்தவர். இவரும், சூர்யாவும் மோதும் சண்டைக்காட்சிகள் கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் படமாக்க உள்ளனர். 

இதற்காக விரைவில் சூர்யா உள்ளிட்ட சிங்கம் படக்குழுவினர் விரைவில் தென் ஆப்ரிக்கா பயணம் செய்ய இருக்கின்றனர். 

பாட்டிலேயே பதில் சொன்ன வம்பு நடிகர்

ஒல்லிபிச்சான் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க குஷ்புவின் ஜெராக்ஸ் நடிகையை கேட்டார்களாம். 

அவரும் ஓகே சொல்லிவிட்டு மறுநாள் தயாரிப்பாளருக்கு போன் போட்டு "சாரி டேட்ஸ் இல்லை. 

அடுத்த தடவை நடிக்கிறேன்"னு சொல்லிட்டாராம். ஆனா உண்மையான காரணம் அது இல்லையாம். விரல் வித்தை நடிகர் ஒல்லிப்பிச்சானுடன் நடிக்க போட்ட தடைதான் காரணமாம். 

இதை அறிந்து நடிகையின் தாய்குலம். நடிகருக்கு போன்போட்டு, "என் மகள் நடிக்கிறது பற்றி முடிவெடுக்க நீ யார்-?" என்கிற ரேன்ஜில் படபட ஆங்கிலத்தில் பொளந்து கட்டினாராம். 

பதில் ஏதும் பேசாத விரல்வித்தை நடிகர் கடைசியாக "போன்ல நான் பேசுறதுக்கு முன்னாடி ஒரு காலர் டியூன் கேட்டிருப்பியே அதான் என்னோட பதில்"னு சொல்லி  போனை வச்சிட்டாராம். 

வம்பு நடிகர் போனோட காலர் டியூன் "வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி, நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி". இது எப்டி இருக்கு.

பவர்ஸ்டாரின் காமெடி இலாகா


இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடியன்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதுகூட சம்பள விசயத்தில் கவனமாகத்தான் செயல்பட்டார்கள். 

நடித்த படங்கள் வரிசையாக ஓடினாலும் சம்பளத்தை கண்மண் தெரியாமல் உயர்த்தாமல் பார்த்து கவனமாகத்தான் உயர்த்தினார்கள். 

ஆனால் தற்போது சந்தானத்தால் தண்ணீர் ஊற்றி வளர்த்து விடப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசனோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றியால் கண்டபடி ஆட்டம் போட்டு வருகிறார். 

யார் பட விசயமாக தொடர்பு கொண்டாலும் என் சம்பளம் கோடியில் தான் ஆரம்பமாகிறது, தர முடியும் என்றால் அட்வான்ஸ் கொடுங்கள். பேரம்பேசி என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று சொடக் போடுகிறாராம்.

பவரின் இந்த பேச்சைக்கேட்டு அவரிடம் கால்சீட் கேட்டு மொய்த்து வந்த பட்ஜெட் படாதிபதிகள் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடித்து விட்டார்கள். 

ஆனால் மெகா பட்ஜெட்டில் படம் பண்ணுபவர்களோ, அவர் கேட்டத் தொகையை மறுபேச்சின்றி கொடுத்து புக் பண்ணி வருகிறார்கள். இதனால் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் பவர். 

அதோடு, தன்னை சந்தானம் சில படங்களில் இருந்து கழட்டி விட்டபோது கலங்கிப்போன பவர்ஸ்டார். அடுத்து தனக்கென ஒரு காமெடி டீமை உருவாக்கும் உள்வேலைகளிலும் தீவிரமடைந்திருக்கிறார். 

இதனால் வடிவேலு, சந்தானத்தின் காமெடி இலாகாகாவில் இடம்பெற்றிருநத சில காமெடி நடிகர்கள் இப்போது பவர் பக்கம் சாய்ந்துள்ளனர்.

மீண்டும் ஸ்ரீதேவியுடன் இணையும் கமல்ஹாசன்


30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கவுள்ளனர், இத்தகவலை நடிகர் கமலே கூறியுள்ளார். 

1970-80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஆகிய இருவருடன் பல படங்களில் நடித்துள்ளார். 

அதிலும் கமலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் பெரிதும் ‌பேசப்பட்டன. 

குறிப்பாக 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களை சொல்லாம். 

இருவரும் தமிழில் கடைசியாக மூன்றாம் பிறை படத்தில் நடித்தனர். அதன்பிறகு பாலிவுட் போன ஸ்ரீதேவி அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்து, போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலானார்.

சமீபத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. இந்நிலையில் கமலும், ஸ்ரீதேவியும் மீண்டும் இணைந்து நடிக்க போவதாகவும், அது மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல்கள் வெளியான நிலையில், இப்போது கமலே ஸ்ரீதேவியுடன் தான் மீண்டும் நடிக்க போவதாக கூறியுள்ளார். 

சமீபத்தில் கமல் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கதையும் தயாராகி வருகிறது, நானே எழுதுகிறேன். அவருக்குப் பொருத்தமானதாக இருக்கும். முழு விவரம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் இதுகுறித்து ஸ்ரீதேவியிடம், கமல் போனில் பேசியதாகவும், ஸ்ரீதேவிக்கும் படத்தின் கதை பிடித்துபோய் நடிக்க சம்மதம் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. அது மூன்றாம் பிறை பார்ட்-2-வா அல்லது வேறொரு புதிய படம் என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.

கோச்சடையான் ரிலீஸில் ஆனந்ததொல்லை ரிலீஸ் - பவர்ஸ்டார்


நடிகர்களில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு இருக்கிற நக்கல் எந்த நடிகருக்கும் இருப்பதாக தெரியவில்லை. 

லத்திகா என்றொரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு, இப்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் முன்னணி காமெடியன் ஆகி விட்டார். 

அரை டஜன் படங்களில் கமிட்டாகியிருப்பவர், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு படாதிபதிகளை மூடுஅவுட் செய்கிறார். 

அதோடு, பவர்ஸ்டாரெல்லாம் ஒரு நடிகரா. அவருடன் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று எகத்தாளமாக பேசிய லட்சுமிராயை ஒன்பதுல குரு படத்தில் தன்னுடன் குத்தாட்டம் ஆட வைத்திருக்கிறார் பவர்.

இப்படி எதையும் சொல்லியடிக்கிற அளவுக்கு மாஸ் நடிகராகியிருக்கிறார். 

மேலும், ரஜினிதான் எனது மானசீக குருநாதர் என்றும் சொல்லிக்கொள்ளும் பவர்ஸ்டார், இப்போது ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசாகிற அன்றே தனது ஆனந்த தொல்லை படத்தையும் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். 

அப்படியென்றால் ரஜினிதான் உங்களுக்கு போட்டி நடிகரா? என்று அவரைக்கேட்டால், எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கே நானேதான் போட்டி என்றும் பல்டி அடிக்கிறார் பவர்.

கமலை வைத்து உலகதரத்தில் ஒருபடம் - ஏ.ஆர்.முருகதாஸ்


நடிகர் கமல்ஹாசனை வைத்து உலகதரத்தில் ஒருபடம் எடுக்க ஆசைப்படுவதாக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் டைரக்டர் முருகதாஸ். இந்தியில் கஜினியை எடுத்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். 

தற்போது துப்பாக்கியை இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார். கூடவே தனது சொந்த தயாரிப்பில் அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.

முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படங்கள்தான் இயக்குகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 

அதை மாற்றும் வகையில் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. 

கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அந்த கனவு நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.

விஸ்வரூபம் - கமலின் வியத்தகு வெற்றிரூபம் விமர்சனம்


வெளிவருவதற்கு முன்பே தடை, தாமதமென்று உலகை விறுவிறுப்பாக பேச வைத்த "விஸ்வரூபம்", வெளிவந்த பின்பும் அதே உலகை வியக்கவும் வைத்திருக்கிறது! "உலக நாயகன் எனும் அடைமொழிக்கேற்ப கமல், உலக தரத்திற்கு தந்திருக்கும் உன்னதமான தமிழ்ப்படம் தான் "விஸ்வரூபம்"!

கதைப்படி கதக் நாட்டிய கலைஞரான கமல் அமெரிக்காவில் அழகிய இந்திய வம்சாளி இளம் பெண்களுக்கு கதக் கற்றுத்தருகிறார். 

பெண் தன்மையுடன் வாழும் கமலின் நடை, உடை, பாவனைகள் எதுவும் பிடிக்காமல், அமெரிக்கன் சிட்டிசன் எனும் பெருமையான அடையாளத்திற்காகவும், தனது உயர் கல்விக்காகவும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் கமலை கட்டிக் கொண்டு மாரடிக்கும்(!) பூஜா குமாருக்கு, உடன் உள்ள ஒருவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்புக்கு கமல் எதிர்ப்பு காட்டக்கூடாது... என்பதற்காக அவர்(கமல்) ஏதும் காதல் குற்றங்கள் செய்கிறாரா...?! என கண்காணிக்க ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை அமர்த்துகிறார்கள் பூஜாகுமாரும் அவரது காதலரும் சேர்ந்து!

அந்த துப்பறியும் நிபுணர் மூலம் கமல் இந்து அல்ல ஒரு இஸ்லாமியர் என்பதும், அந்த துப்பறியும் நிபுணர் கொல்லப்படுவதின் மூலம், கமல் அமெரிக்க சட்டத்திட்டத்திற்கு புறம்பாக ஏதேதோ... செய்கிறார் என்பதும் தெரியவருகிறது! அப்படியென்றால் கமல் தீவிரவாதியா...? எனக்கேட்டால் அதுதான் இல்லை... அதுதான் விஸ்வரூபம் படத்தின் கதையே...

அதாகப்பட்டது, கமல் ஒரு இந்திய ரா உளவுப்பிரிவு அதிகாரி. காஷ்மீரி அப்பாவுக்கும், தமிழ் அம்மாவுக்கும் பிறந்தவர். தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களுக்கு போர் பயிற்சிகளை கற்றுத் தருகிறார் கமல். 

அவர்கள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, அமெரிக்காவை தகர்க்க தலிபான்கள் போடும் சதி திட்டத்தை, உதவியாளர் ஆண்ட்ரியா, உயர் அதிகாரி சேகர் கபூர் உள்ளிட்டோருடன் அமெரிக்கா போய் (ஆரம்பத்தில் அமெரிக்க போலீஸ்க்கு தெரியாமலும், அதன்பின் அமெரிக்க போலீஸின் உதவியுடனும்...) முறியடிப்பது தான் "விஸ்வரூபம்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மொத்த கதையும்!

இந்த கற்பனை கதையை காண்போர் கண்களும், கனத்த இதயங்களும் கூட மிரளும் வகையில் மிகமிக பிரமாண்டமாக அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கியிருக்கும் காரணத்திற்காகவே கமலுக்கு "கங்கிராட்ஸ் சொல்லலாம்!

கதக், கலைஞர் விஸ்வநாத்தாகவும் சரி, விசாம் அகமது காஷ்மீரியாகவும் சரி, கமலால் மட்டுமே கலக்க முடியும் என்பதை "ஃபிரேம் டூ ஃபிரேம்" நிரூபித்திருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன். 

"என் மனைவிக்கு சிக்கனை பிடிக்கும், ‌எனக்கு என் மனைவியை பிடிக்கும்..." என்னும் சாதாரண வசனங்களில் தொடங்கி, "கடவுளுக்கு நான்கு கைகள் இருந்தால் சிலுவையில் எப்படி அடிக்க முடியும்...? அதனாலதான் நாங்க கடவுளை கடல்ல தூக்கி போட்டுவிடுவோம்..." எனும் சிந்திக்க தூண்டும் கூர்மையான வசனங்கள் ஒவ்வொன்றிலும் கமலின் குசும்பும், கூர்மையான கருத்துக்களும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன. 

பெண் தன்மையுடன் இருக்கும் கமல் தொழுகிறேன் பேர்வழி... என சடாரென்று வில்லன்களை பந்தாடி தன் மனைவி பூஜா குமாருடன் தப்பிக்கும் இடத்தில் தொடங்கும் விறுவிறுப்பு விஸ்வரூபம் படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் பெரும் பலம். அந்த இடத்தில் ரசிகர்களின் வாய்கள், தம்மையும் அறியாமல் கமல் - கமல் தான் என முணுமுணுப்பதும், காதை பிளக்கும் விசில் சப்தமும், கைதட்டல்களால் அரங்கு அதிர்வதும் கண்கூடு.

கமல் மாதிரியே தீவிரவாதி உமராக வரும் ராகுல் போஸ், கமலின் உயர் அதிகாரி சேகர் கபூர், கமலின் மனைவி நிருபமாக வரும் பூஜாகுமார், உதவியாளர் சஸ்மிதாக வரும் ஆண்ட்ரியாவும், நாசர், சலீம்(ஜெய்தீப்) உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே!பலே!!

ஆப்கானிஸ்தான் மலை பிரதேசங்கள், அமெரிக்காவின் அழகிய நகரங்கள், வானில் சீறிப்பாயும் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், துப்பாக்கி ரகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் த்தரூபமாக நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக்கியிருக்கும் சானுஜான் வர்கீஸின் ஒளிப்பதிவும், குணால் ராஜனின் ஒலிப்பதிவும், சங்கர்-ஹாசன்-லாயின் இசைப்பதிவும், மதுசூதனனின் விஷூவல் எபக்ட்ஸூம், கெளதமியின் உடை அலங்காரங்களும், லால்குடி இளையராஜாவின் கலை-இயக்கமும், மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பும், விஸ்வரூபத்தின் பிரம்மாண்டங்கள் பெரும் ப்ளஸ் பாயிண்டுகள்.

இந்தப்படத்தை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்த்ததைவிட இந்துக்கள் தான் எதிர்த்திருக்க வேண்டும்... என சொல்லாமல் சொல்லும் சில காட்சிகளை விஸ்வரூபத்தில் கமல் வழிய திணித்திருப்பதும், அதை., இந்துக்கள் எதிர்க்காததும் ஏன் என்பது புரியாத புதிர்...!!

விஸ்வரூபத்தை முழுநீள் ஆக்ஷ்ன் படமாக தந்திருக்கும் கமல், ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம் போல் கவனம் செலுத்தாதது கமல் ரசிகர்களை சற்றே ஏமாற்றம் கொள்ள செய்தாலும் உலகதரத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தந்திருப்பதற்காக கமலுக்கு "ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!

மொத்தத்தில் "விஸ்வரூபம்" கமலின் "வியத்தகுசொரூபம்"! "வெற்றிரூபம்"!!

அடுத்தடுத்த எதிர்ப்புகள் - அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்


துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து, புதிய படங்கள் வெளியீட்டிற்கு பல்வேறு தடைகள் தொடர்வதால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தவையற்ற எதிர்ப்புகளால், பட வெளியீடு தாமதப்படுவதால், கோடிக்கணக்கில் நஷ்டமடைய வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

கமலின், "விஸ்வரூபம் படத்தையடுத்து, மணிரத்னத்தின், "கடல், அமீரின், "ஆதிபகவன், ஹரியின், "சிங்கம் 2 மற்றும் "ஆண்டவ பெருமாள் படங்களுக்கு, சில தரப்பில்இருந்து திடீர் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

"விஸ்வரூபம்; இது குறித்து, தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: "விஸ்வரூபம் படத்திற்கு, சென்சார் மூலம், "யு/ஏ சான்றிதழ் பெற்ற பிறகு, படத்தில் பிரச்னை வருவதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை என, கமல் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். 

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் உதவியை கேட்டிருக்க வேண்டும்."விஸ்வரூபம் படம் பிரச்னையில், கமல் மட்டுமே, அவருக்கு தெரிந்த வழியில், முடிவு காண முயன்றதால் தான், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. 

கமலின் நிலையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள், இயக்கங்கள் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். மொத்தத்தில், "விஸ்வரூபம் படப்பிரச்னையில், கமல் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் காரணமாக, அடுத்தடுத்த படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 

எந்த அமைப்பு, எந்த இயக்கம் எப்போது மிரட்டுமோ என்ற அச்சத்தோடு படத்தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

"கடலுக்கு சிக்கல் : மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் - துளசி நடித்துள்ள,"கடல் படத்திற்கு, சென்சார் போர்டு மூலம், "யு சான்றிதழ் வழங்கப்பட்டு, திரைக்கு வந்துள்ளது. 

ஆனால், "இப்படத்தில், கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் காட்சிகள் உள்ளன. ஒரு காட்சியில், ஏசுவின் சிலை உடைந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. 

இதற்கு, "யு சான்றிதழ் வழங்கியது தவறு. படம் திரையிட தடை விதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமீர் இயக்கியுள்ள, "ஆதிபகவன் படத்தில், இந்து சமய நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், படத்தை இந்து இயக்க தலைவர்களுக்கு திரையிட்டு காட்டிய பின்பே, தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சியின் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்த படங்கள் : இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள, "சிங்கம்-2 படத்தில், "முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல, காட்சிகள் உள்ளதென்றும், இக்காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என, தவ்ஹீத் ஜமா அத் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் நடித்து, இம்மாதம், 22ம் தேதி வெளியிடப்பட உள்ள, "ஆண்டவ பெருமாள் படத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும். "கடவுளுக்கு சம்பந்தமில்லாமல், காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஆண்டவபெருமாள் என, இந்து கடவுள் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர் என, தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை : இப்படி, வரிசையாக தமிழ் படங்கள் சிக்கலில் மாட்டும்போது, சம்பந்தப்பட்ட படத்தினர் மட்டுமே, தனித்து நின்று போராட வேண்டி உள்ளது. சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படங்களுக்கு, எதிர்ப்பு உருவாகும் போது, திரையுலக சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதற்காக, சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஹீரோ ஹீரோயின் இல்லாத படம்

தொலைக்காட்சி நடிகை பிருந்தாதாஸ் இயக்குனராகி விட்டார். படத்தின் பெயர் "ஹாய் டா". பெருமான் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் பிருந்தா. 

அந்த அனுபவத்தில் சினிமா தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொண்டு இயக்குனராகி விட்டார். "பெருமான் படத்தில் பணியாற்றியபோது அதன் இயக்குனர் ராஜேஷ் கண்ணாகிட்ட இந்த கதையை சொன்னேன். அவரே தயாரிக்கிறேன்னு சொன்னார் படமும் தயாராயிட்டிருக்கு. 

இது ஒரு புது அட்டம்ப்ட். ஹீரோ ஹீரோயின்னு யாரும் கிடையாது. உதய், அஸ்வின், பிரதீஷ், ஜாக்குலின், பாவனா, இந்த 6 பேரும்தான் முக்கிய கேரக்டர். இவுங்களுக்குள்ள நடக்குற யதார்த்தமான விஷயங்கள்தான் கதை. அதை காமெடியா சொல்றேன். 

துன்பம் வரும்போது நண்பர்கள் எந்த அளவுக்கு நடந்துக்கணும் என்பதையும், எந்த பிரச்னையும் பேசித் தீர்க்காலாம் என்பதையும் ராவான மெசேஜா சொல்லாமா சுவாரஸ்யமா சொல்றேன். நடிகையா ஏத்துக்கிட்டவங்க. இயக்குனராவும் ஏத்துக்குவாங்கன்னு நம்புறேன்" என்கிறார் பிருந்தாதாஸ்.

சொர்ணாக்காவாக அவதாரமெடுக்கிறார் அதிரடி நமீதா


சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோது, தனது உடல்கட்டை உயரத்துக்கு ஏற்ப கச்சிதமாக பராமரித்து வந்தார் நமீதா. 

அதனால் அரும்பு மீசை ரசிகர்கள் அவரது கட்டுமஸ்தான கவர்ச்சியைக்கண்டு கிறங்கிப்போய் கிடந்தார்கள். 

நமீதா ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால், அவரை அரைகுறை மற்றும் குட்டை பாவாடை டிரஸ்களில் கண்டு களிக்கலாம் என்பதற்காக ஒரு பெருங்கூட்டமே தியேட்டர்களுக்குள் புகுந்தது. 

ஆனால் இப்படி பெருவாரியான ரசிகர்களை பெற்றபோதும், நமீதாவுக்கு சமீபகாலமாக மருந்துக்கும் படம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு வந்தால், தெலுங்கு, கன்னடத்தில் பிசி என்றும், கன்னடத்துக்கு சென்றால் தமிழில் ரொம்ப பிசி என்று மாத்தி மாத்தி சொல்லி வண்டியோட்டி வருகிறார். 

இப்படி சொல்லிக்கொண்டு வேலை வெட்டியே இல்லாமல் சதா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமீதா, தற்போது இன்னும் பன்மடங்கு ஊதி பெருத்து விட்டார். 

இதனால் தற்போதைய சூழ்நிலையில் படவாய்ப்பே அவருக்கு கிடைத்தாலும், அவரது உடம்பை பார்த்து நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள். 

இந்த உடல் மாற்றத்தை முன்வைத்து, அவரை முழுநேர வில்லி வேடத்தில் நடித்து சினிமாவில் மறு பிரவேசம் செய்யுமாறு சில கோலிவுட் நண்பர்கள் நமீதாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள். 

ஆக, கூடிய சீக்கிரத்திலேயே அடுத்த சொர்ணாக்காவாக நமீதா அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கமலின் விஸ்வரூபம் பார்த்த ரஜினி


தடைகளை தாண்டி விஸ்வரூபம் இன்று தமிழ்நாடு முழுவதும் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சியை கமல் நேற்று சத்யம் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 6 டிகிரி தியேட்டரில் திரையிட்டுக் காட்டினார். 

இந்த தியேட்டரில்தான் ஆரோ 3டி ஆடியோ தொழில்பட்ப வசதி உள்ளது. இந்த சிறப்பு காட்சிக்கு ஜெயராம், சுஹாசினி, குஷ்பு, பிரபு, யுவன், கார்த்திக் ராஜா, பார்த்திபன், உள்பட பல திரையுலக பிரகமுகர்கள் வந்து படத்தை கண்டு களித்தார்கள். 

கமல் தியேட்டர் வாசலில் நின்று அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் உள்ள மினி தியேட்டரில் விஸ்வரூபம் திரையிட்டுக் காட்டப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தார் செய்திருந்தனர். ரஜினி, தன் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் பார்த்தார். 

படம் பார்த்து முடித்ததும் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். "கமல் உங்க ஹார்ட் ஒர்க் பார்த்தேன் எக்ஸ்லெண்ட். டிபெனட்டா அதுக்கான பெனிபிட் உங்களுக்கு கிடைக்கும். 

உங்க பிரண்டுங்றதுல எனக்கு இன்னும் பெருமை ஜாஸ்தியாய் இருக்கு" என்று குறிப்பிட்டாராம்.

வருகிற 10ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விஸ்வரூபத்தின் பிரீமியர் ஷோ இருக்கிறது. இதற்காக கமல் பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்ட தனது விஸ்வரூபம் டீமுடன் 9ந் தேதி இரவு புறப்பட்டுச் செல்கிறார்.

விஸ்வரூபம் - நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்


நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து நாளை(பிப்-7ம் தேதி) வரப்போகிறது என்ற நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது

இந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்துகொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு அப்படியே திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனரா என்பதில் சந்தேகம் உள்ளது

பவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் வெளிவந்துள்ள சி.டி.,யை பிடித்ததாக இரண்டு நாளாக போலீசார் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.,ஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி., சூரையிடுவது போல விநியோகிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவையும் தாண்டி தியேட்டர்களில் படம் ஒடுவது என்பது இறைவனின் கையில்தான் உள்ளது,கமல் பாணியில் சொல்வதானால் இயற்கையின் கையில் உள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது. 

ஆனால் கமல் ரசிகர்களுக்கே ஒரு முறைபார்த்தால் படம் புரியாது என்பது மட்டும் உண்மை. அதே நேரம் கதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நடத்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காக மட்டுமே கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்

கதைக்களம்,நடிகர்கள் தேர்வு,மேக்கப்,லொக்கேஷன்,இசை,கேமிரா என்று ஒவ்வொரு காட்சியிலும் கடுமையாக உழைத்துள்ள கமல் கதையை எளிமையாகவும்,கோர்வையாகவும் சொல்லத் தவறிவிட்டார்.

நியூகிளியர் சிஸ்டம் புரிந்தால்தான் படம் புரியும் ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒரு சதவீதம் பேருக்காவது இந்த நியூகிளியர் பற்றி புரியுமா என்பது சந்தேகமே.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை குண்டு வெடித்துக்கொண்டே இருக்கிறது.,இதற்குதான் அதிகம் செலவானதோ

படத்தில் ஆன்ட்ரியா ஒரு வசனம் பேசுவார், இங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று அதென்னவோ நிஜம்தான் படம் முடிந்தபிறகுகூட படத்தில் கமல் கேரக்டர் என்ன என்பது புரியாமலே உள்ளது.

ஆனால் ஒன்று நிச்சயம், நாலு பைட்,எட்டு காமெடி,இரண்டு டான்ஸ் என்று பொழுதுபோக்கு வரிசையில் இடம் பெறும் படங்கள் வரிசையில் இந்த படத்தை நிறுத்திப்பார்க்க முடியாது,கூடாது.

ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .

இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.

சூர்யாவை இயக்க கவுதம் மேனனுக்கு தடை


சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குவதற்கு கவுதம் வாசுதேவ மேனனுக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. 

சென்னை 8வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், போட்டோன் பேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோர் உள்ளனர். 

இவர்களது நிறுவனத்துடன் 27.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர். ரகுமான் இசையில், நடிகர் சிம்பு கதாநாயகனான நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்து தருவதாக கூறி ரூ.4.25 கோடியை முன்தொகையாக என்னிடம் வாங்கினார்கள். 

ஆனால் இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை. இதற்கிடையில் பி.மதன் தனியாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற கம்பெனி தொடங்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தை தயாரித்து வருகிறார். 

அதேபோல, கவுதம் வாசுதேவ மேனன், நடிகர் சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தன் என்ற படத்தை இயக்கப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். 

இவர்கள் 2 பேரும் தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும். 

இதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்று கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும், என்று கூறியிருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதி, டைரக்டர் கவுதம் வாசுதேவ மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...