சூர்யாவை இயக்க கவுதம் மேனனுக்கு தடை


சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குவதற்கு கவுதம் வாசுதேவ மேனனுக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. 

சென்னை 8வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், போட்டோன் பேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோர் உள்ளனர். 

இவர்களது நிறுவனத்துடன் 27.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர். ரகுமான் இசையில், நடிகர் சிம்பு கதாநாயகனான நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்து தருவதாக கூறி ரூ.4.25 கோடியை முன்தொகையாக என்னிடம் வாங்கினார்கள். 

ஆனால் இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை. இதற்கிடையில் பி.மதன் தனியாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற கம்பெனி தொடங்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தை தயாரித்து வருகிறார். 

அதேபோல, கவுதம் வாசுதேவ மேனன், நடிகர் சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தன் என்ற படத்தை இயக்கப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். 

இவர்கள் 2 பேரும் தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும். 

இதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்று கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும், என்று கூறியிருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதி, டைரக்டர் கவுதம் வாசுதேவ மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...