அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல் - பின்னணி

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற செய்தி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை ‌நம்பத்தகுந்த ‌செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.


அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள். இதனை வலியுறுத்தும் வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள் அறிவித்திருந்தனர்.

இதுபற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும் ‌ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு அரசியல் பிடிக்காது ; நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது.

அவர்களுடன் செலவிடவே நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது ரசிகர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தார். அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நான் எனது 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவு - பகலாக மும்முரமாக ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள், என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக, ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நான் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள்.

இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால், என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார். அஜித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

1 comments:

Paarvai said...

nalla mudivu... At least few actors have the guts to speak up.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...