வத்திக்குச்சி - விமர்சனம்


பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன், அண்ணன் முருகதாஸின் தயாரிப்பில் கதாநாயகராக களம் இறங்கி இருக்கும் படம்தான் "வத்திக்குச்சி!" முருகதாஸின் உதவியாளர் கின்ஸிலின் எழுதி-இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகி என்பது பலம்!

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர்ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில் வசித்தபடி ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலிக்கும் காதல்! 

அந்த காதலை திலீபன் தன் ஷேர் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்கும் அஞ்சலியிடம் சொல்லிவிட, அஞ்சலியோ மனதில் ஆசையிருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார். 

இந்நிலையில் ஊருக்கு உதவப்போய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளும் திலீபனை போட்டு தள்ள துடிக்கின்றனர் லோக்கல் தாதா சம்பத் தலைமையிலான கூலிப்படையும், அவர்களுக்கு பணஉதவி செய்யும் நகைக்கடை அதிபர் ஜெயபிரகாஷூம் அவரது மகனும். இவர்கள் தவிர்த்து திலீபனின் வீட்டிற்கு எதிர்வீட்டிலேயே வசிக்கும் காமெடி ஜெகனும், அவனது நண்பகளும் வேறு திலீபனை தீர்த்து கட்ட துப்பாக்கியும் கையுமாக திரிகின்றனர். அத்தனைபேரிடமிருந்தும் தப்பித்து திலீபன் அஞ்சலியை கரம் பிடிக்கிறாரா.? அல்லது அஞ்சலி, திலீபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாரா...? என்பது சஸ்பென்ஸ்கள் பல நிறைந்த க்ளைமாக்ஸ்!

புதுமுகம் திலீபன், இவருக்கு நடிப்பை விட ஆக்ஷ்ன் நன்கு வருகிறது. ஆக்டிங் சீன்களைக் காட்டிலும், ஆக்ஷ்ன் சீன்களில் அடித்து தூள்பரத்துகிறார் மனிதர். கலையான தமிழ்முகம், காளை போன்று ஆஜானுபாகுவான உடல்வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் திலீபனிடம் ஏதோ ஒன்று குறைகிறது. அதை அடுத்தடுத்த படங்களில் அவர் சரி செய்து கொள்வது அவருக்கும் ரசிகர்களுக்கு நலம் பயக்கும்!

நாயகி அஞ்சலி, ஏதா "எங்கேயும் எப்போதும்" வெற்றிப்படத்தில் முருகதாஸ் தன் தயாரிப்பில் நடிக்க வைத்ததற்கு நன்றி கடனாக, இந்தப்படத்தில் அவரது தம்பி திலீபன் ஜோடியாக நடிக்க சம்மதித்தது மாதிரி தெரிகிறது! வருகிறார்... போகிறார்... டயலாக் பேசுகிறார்... என்ற அளவிலேயே ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருக்கும் அஞ்சலி, மற்ற படங்களைக்காட்டிலும் இந்தப்படத்தில் காஸ்டியூம் விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்தாமல் பட்டும்படாமல் இருந்திருப்பது ஏன் என்பது புரியாதபுதிர். பாவம் ரசிகர்கள்!

ஹீரோவின் அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும், அம்மாவாக சரண்யாவும் வரவர போரடிக்கிறார்கள். இவர்களை இப்படி பார்த்து பார்த்து சலித்து போய்விட்டதை கோலிவுட் டைரக்டர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ...?! அஞ்சலியின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, வில்லன்கள் ஜெய்பிரகாஷ், சம்பத், ஜெகன் என ஏகப்பட்ட பேர், அதில் காமெடி ஜெகன் சொபஸ்டிக் வில்லதனத்திற்கு அன்பிட்!

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, எம்.ஜிப்ரானின் இசை உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "வத்திக்குச்சி"யை "பத்திக்கிச்சு" என பாராட்டி சொல்ல வைத்தாலும், பி.கின்ஸ்லினின் எழுத்து-இயக்கத்தில், நல்ல கதையில் கோர்வை இல்லாமல் வரும் காட்சிகள், ‌தொடர் இல்லாமல் வரும் சம்பவங்கள், தன் கையாளாக இருந்து கைமாறிப் போனவனை ரயிலில் தள்ளி தீர்த்துகட்டும் தாதா சம்பத், ஹீரோவை தீர்த்து கட்ட மட்டும் தாமதம் பண்ணும் மர்மம், காரணம் தேடும் கவனம்...உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் "வத்திக்குச்சி"யை பாதி "பத்திக்கிச்சு" என்றும் மீதி "நமத்து‌ப்போச்சு" என்றும் சொல்ல வைக்கின்றன!

மொத்தத்தில், "வத்திக்குச்சி" - ஹீரோயிஸத்துக்கு பக்க(கா) "வாத்தியக்குச்சி!" 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...