கமலுக்கு ஆதரவாக தியேட்டர் உரிமையாளர்கள்


விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியேட்டர் உரிமையாளர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். 

கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தை அவரே நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். 

பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது ஜன 10ம் தேதி இரவில் டி.டி.எச்-ல் இப்படத்தை ஒளிப்பரப்பு செய்கிறார் கமல். 

இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி ஏர்டெல், வீடியோகான் உள்ளிட்ட டி.டி.எச். நிறுவனங்கள் படத்தை ஒளிப்பரப்பு செய்ய உள்ளனர். 

கமலின் இந்த முடிவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

டி.டி.எச்-ல் படத்தை வெளியிட்டால் அவர்களது படத்தை திரையிட மாட்டோம் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்தசூழலில், கோவையில் த‌ியேட்டர் உரிமையாளர்கள் கமலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், விஸ்வரூபம் படத்தையும் திரையிட சம்மதம் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் சென்னையிலும் சில தியேட்டர் உரிமையாளர்கள் விஸ்வரூபம் படத்தை திரையிட சம்மதம் தெரிவித்து, அதற்கான அறிவிப்பு பலகைகளையும் ஒட்டியுள்ளனர். 

திருச்சியிலும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கமலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.

அதேசமயம் சங்கத்தின் முடிவை மீறி யாராவது விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு அளித்தால், அவர்களுக்கு எங்களால் எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது என்று தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

இதனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்படும் சூழ்நி‌லை உருவாகியுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...