தொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். 

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. 

அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை.


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு "சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் "இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். 

தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும். 



சமீபத்தில் வைரமுத்துவிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து "ஒரு முறை ஜெயகாந்தன் தன் மகன் திருமணத்தை என் திருமண மண்டபத்தில் நடத்தினார். அந்த திருமண அழைப்பிதழை ஒரு இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். 

பத்திரிகையில் மண்டபத்தின் பெயரை படித்த இசை அமைப்பாளர் நான் அந்த மண்டபதுக்கு எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். உடனே வராதவருக்கு எதற்கு அழைப்பு என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்து விட்டார் ஜெயகாந்தன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 

வைரமுத்து குறிப்பிடும் இசை அமைப்பாளர் இளையராஜாதான் என்பது அனைவருக்கும் தெரியும்.  "சிலர் மறைமுகமாக உங்களை தாக்கி வருகிறார்களே?" என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து "கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். 

அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட சிகிச்சை தருவதே சிறந்தது" என்று கூறியிருக்கிறார். அதோடு என்னை மறைமுகமாக தாக்குபவர்களுக்கு சைகோசிஸ் என்ற மனநோய் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.



மோதல் முற்றி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தாக்கிக் கொள்வார்களோ தெரியவில்லை.



இந்த பங்காளிச் சண்டைக்கு முடிவே இல்லையா?

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...